காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம் கழிவுநீர் குளமாக காட்சி அளிப்பதாக பக்தர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர். நகரை காக்கும் தெய்வம் கொப்புடைய நாயகி அம்மன். இக்கோயிலில் சித்திரை, வைகாசி திருவிழா விமரிசையாக நடக்கும்.
தேர்திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தாலும், அவற்றில் அப்பகுதியினர் கழிவுகளை கொட்டுவதால், கழிவுநீர் குளமாக மாறிவிட்டன. இது மட்டுமின்றி கடைக்காரர்கள், அப்பகுதிக்கு வருவோர் தெப்பக்குளத்தை சுற்றி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குளத்திற்குள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை வீசி செல்கின்றனர். இது மட்டுமின்றி தெப்பக்குளத்தை சுற்றி, குப்பையை கொட்டி விடுகின்றனர். இது போன்ற காரணத்தால் கோயில் தெப்பக்குளம் கழிவுகளில் கூடாரமாக விளங்குகிறது. அறநிலையத்துறை நிர்வாகம் கோயில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, கம்பிவேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.