பதிவு செய்த நாள்
19
நவ
2019
04:11
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமி மற்றும் காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் காலபைரவர் ஜெயந்தி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து காலபைரவரை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட, பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சிணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.