பதிவு செய்த நாள்
20
நவ
2019
02:11
சேலம்: ஆக்கிரமிப்பு கோவிலில் உள்ள அம்மன் சிலையை அகற்ற முயன்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, 10 பெண்கள் உட்பட, 30 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணன்புதூரில், விநாயகர் கோவில் உள்ளது. அதன் முன்புறம், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கொட்டகை அமைத்து, அம்மன் சிலை வைத்தனர். அதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த முரளி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அம்மன் சிலையை, இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி, கொட்டகையை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. நேற்று (நவம்., 19ல்), சேலம், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தங்கதுரை, மாநகராட்சி உதவி கமிஷனர் கவிதா, தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.
சிலையை, மற்றொரு கோவிலுக்கு கொண்டு சென்ற நிலையில், 10 பெண்கள் உள்பட, 30 பேர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலைமறியலுக்கு முயன்றனர். ஆனால், பாது காப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து, அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.