பதிவு செய்த நாள்
20
நவ
2019
02:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச.,1ல், கொடி யேற்றத்துடன் தொடங்கி, டிச.,10ல், மகா தீபம் ஏற்றும் விழா நடக்க உள்ளது. தீப திருவிழா நடத்துவது குறித்து, குருக்கள், தேர் கட்டை போடும் தேர் மிராசு போயர்கள், ஆச்சாரிகள், தீபம் ஏற்றும் முறைதாரர்களான தீப நாட்டார்கள், பிச்சகர்கள் ஆகியோருடன், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்மிராசு போயர்கள் கூறுகையில், ’தேரோட்டத்தில் கட்டை போடுபவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டை கொண்டு, மகா தீப திருவிழாவில், கோவிலினுள் செல்ல அனும திக்க வேண்டும்,’ என்றனர். தீபம் ஏற்றும் முறைதாரர்கள் கூறுகையில், ’மலை மீது தீபம் ஏற்ற செல்லும்போது, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மகா தீப கொப்பரை வைக்கும் மலைஉச்சியில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல், தீபம் ஏற்ற போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மகா தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்ற, கோவில் வளாகத்திலிருந்து சரியான முறையில் சிக்னல் கொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்தனர். கோவில் இணை ஆணையர் ஞானசேகர் பேசும்போது, ”தீப திருவிழா வழக்கம்போல், இந்தாண்டும் சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிசீலிக்கப்படும்,” என்றார்.