பதிவு செய்த நாள்
22
நவ
2019
11:11
சென்னை: கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக வருவாய் துறை, 2019 ஆக., 30ல், அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், ஆட்சேபனை இல்லாத, அரசு புறம்போக்கு நிலத்தில், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி, அவர்களுக்கு தகுந்த இடத்தை கண்டறிந்து, பட்டா வழங்குவது குறித்தும், தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அரசாணை, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும், பச்சை கொடி காட்டுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களையும், சமமாக பார்க்க முடியாது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்குவது, அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது; அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவுக்கு அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வருவாய் துறை பதில் மனு தாக்கல் செய்தது.
சில நாட்களுக்கு முன்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜாவும் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். அதற்கு, நீதிபதிகள், பிரதான மனுவை நிலுவையில் வைக்கிறோம். இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்கிறோம். ஏற்கனவே, அரசின் நிலையை, பதில் மனுவில் தெரிவித்து விட்டீர்கள் என்றனர். மேலும், தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியதுடன், அரசாணைக்கு தடை கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று(நவ.,22) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பட்டா தர இடைக்கால தடை விதித்தனர். மேலும், கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையாக வழங்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டனர்.