கள்ளக்குறிச்சி : சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை கள்ளக்குறிச்சி வந்தது.இந்து தர்மம் தழைத்தோங்கவும் மற்றும் கிராமம், கோவில், நீர்நிலை, மண், குடும்பம், தர்மம் உள்ளிட்ட 6 வகையான தர்மங்கள் வளரவும், ஐயப்ப தர்மம் என்ற பெயரில் பிரசார ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சபரி மலையில் உள்ள பந்தளத்தில் இருந்து ரத யாத்திரை துவங்கியது. தமிழ்நாட்டில் செப்டம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை 4 மாதங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 7 ரதங்கள் 4 மாவட்டத்திற்கு ஒரு ரதம் வீதம் ஒவ்வொரு நாளும் பிரசார பயணம் மேற்கொள்கின்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை ரதம் வலம் வருகிறது. கள்ளக்குறிச்சியில் பழைய மாரியம்மன் கோவிலில் ரதத்தில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உள்ள கோவில்கள் தேரோடும் வீதிகள் வழியாக ரதம் வலம் சென்றது. கள்ளக்குறிச்சி தர்மசிங் தலைமையிலான சதாசிவ பரப்பிரம்ம திருக்கயிலாய வாத்தியக் குழுவினர் வாத்தியங்கள் வாசித்து ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.