செயல்பாட்டுக்கு வராத உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2019 03:11
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறநிலையத்துறையின் உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளன. இதனால் ஐம்பொன் சிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அறநிலையத்துறை கோயில்களில் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தலா 94 லட்சம் ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்கள், இரண்டு அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டன.2017 ஆகஸ்ட் 7 ல் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் வளாகத்தில் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தை முதல்வர் பழனிசாமி, காணொளி மூலம் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோயில், கும்பகோணம், திருப்பூர், பெரம்பலுார் உள்ளிட்ட இடங்களில் திறக்கப்பட்ட பாதுகாப்பு மையங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குக்கிராமங்களில் உள்ள கோயில் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. கோயில் சிலைகள் திருட்டு போவதை தடுக்க உலோக திருமேனி பாதுகாப்பு மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.