பதிவு செய்த நாள்
23
நவ
2019
10:11
சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார்.
இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 1926 நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கப்ப ராஜு - - ஈஸ்வரம்மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா அவதரித்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.
1940 அக்டோபர் 20: சத்யநாராயண ராஜு தனது 14வது வயதில், தன் பெயர் சாய்பாபா என்றும், தான் ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும், பக்தர்களின் அழைப்பின் பேரில் வந்து
இருப்பதாகவும் அறிவித்தார். அந்த நாள் அவதார அறிவிப்பு தினம் என உலகெங்கிலும்
பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
1947: சாய்பாபா, குடும்பத்தில் இருந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே இருந்த கோவிலில்
(பாத மந்திரம்) வசிக்கத் தொடங்கினார்.
1950 நவம்பர் 23: புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என்னும் ஆசிரமக் கட்டடத்தை சாய்பாபா தனது 24வது பிறந்த நாளில் திறந்து வைத்தார்.
1957 அக்டோபர்: தாயார் ஈஸ்வரம்மா வேண்டுகோளுக்கு இணங்க, பிரசாந்தி நிலையத்துக்குப் பின்னே இருக்கும் குன்றின்மீது இலவசப் பொது மருத்துவமனையைத் திறந்தார்.
1968 ஜூன் 29: சாய்பாபா கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். அவர் வெளிநாட்டிற்குச் சென்றது இந்த ஒருமுறை மட்டுமே.
1968 ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந்தபூரில் மகளிர் கல்லுாரியைத் திறந்து வைத்தார்.
1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ராவில் சத்யம் என்ற
மந்திரை நிறுவினார்.
1972: ஆன்மிக மற்றும் சமுகப் பணிகளை நிர்வகிக்க ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையை நிறுவினார்.
1973: ஹைதராபாதில் சிவம் மந்திரை நிறுவினார்.
1981 நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1981 ஜனவரி 19: சென்னையில் சுந்தரம் மந்திர் திறந்துவைக்கப் பட்டது.
1991 நவம்பர் 22: தரமான சிகிச்சையை அனைவருக்கும் இலவசமாக வழங்க, புட்டபர்த்தியில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது.
1995 மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமான ராயலசீமா பகுதியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றினார்.
2001 ஜனவரி 19: ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கென சாய்பாபா ஏற்படுத்திய நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெங்களூரில் துவக்கி வைக்கப்பட்டது.
2011 ஏப்ரல் 24: ஞாயிற்றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய்பாபா ஸித்தியடைந்தார். புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தின் குல்வந்த் ஹாலில் சாய்பாபாவின் மஹாசமாதி
அமைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் ஆண்டுதோறும் நவம்பர் 23 அன்று, சாய்பாபாவின் அவதார தினம் கொண்டாடபடுகிறது. ஏப்ரல் 24 அன்று மகாசமாதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இவை தவிர மகா சிவராத்திரி, ராமநவமி, குருபூர்ணிமா, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி,
கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற அனைத்து மத விழாக்களும் இங்குசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிறு மாலை 6 மணி வரை எங்கும் இல்லாத வகையில் அகண்ட பஜன் என்ற இடைவிடாத 24 மணி நேர பஜனை உலகெங்கிலும் நடைபெறும்.பக்தர் குழுக்கள் மாறி மாறித் தொடர்ந்து இந்த பஜனையை நடத்துவது சிறப்பாகும்.
தொடரும் சேவை: புட்டபர்த்தியில் சாய்பாபா இருந்த போது நடைபெற்று வந்த மருத்துவம், கல்வி, அன்னதான சேவைகளும், மற்றச் சேவைகளும் அதேபோல் தற்போதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் 115 நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சமிதிகளில், அன்னதானம், மருத்துவ முகாம், சிறாருக்கு ஒழுக்கக் கல்வி மற்றும் பல பொதுச் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புட்டபர்த்தியில் உள்ள பதிவேட்டில் 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பக்தர்கள் இங்கே தரிசனத்துக்கு வருகின்றனர்.புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை உள்ளத்துடன் முதலில் சென்று உதவுபவர்கள் சாய் நிறுவனத்தின் இயற்கைப் பேரிடர் நிவாரணப் பிரிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.