ஆண்டிபட்டி : மலையில் பெய்த மழையால் மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில்.
மருதமரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் சுனை நீர் கோயிலின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல்நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர். மாதாந்திர அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மாவூற்று வேலப்பர், கருப்பசுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்வர். கடந்த பல மாதங்களாக சுனையில் நீர் சுரப்பு குறைந்ததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சுனையில் கசிந்து வந்த நீரை புனிதநீராகவும், நீராட, கை,கால் கழுவ பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலைப்பகுதியில் பெய்த மழையால் சுனையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராட ஏற்றதாக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.