பதிவு செய்த நாள்
27
நவ
2019
03:11
ஸ்ரீநகர் : காஷ்மீரில் உள்ள தர்காவுக்கு, விஷமிகள் தீ வைத்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து கோவில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு, துணை நிலை கவர்னர் ஜி.சி.முர்மு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில், மிர் சயீத் முகமது ஹம்தானி என்ற சூபி ஞானியின் தர்கா உள்ளது.
நடவடிக்கை: நேற்று முன் தினம் இரவு, சில விஷமிகள், இந்த தர்காவுக்கு தீ வைத்தனர். இதில், தர்காவின் சில பகுதிகள் தீக்கிரையாயின. இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஜி.சி.முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவும், ஒரு தரப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும், விஷமிகள் சிலர், தர்காவுக்கு தீ வைத்துள்ளனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும். வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்படாமல், மக்கள் அமைதி காக்க வேண்டும்.தீக்கிரையான தர்காவை, விரைவில் சீரமைக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், வெடிகுண்டு வெடித்தது. இதில், பஞ்சாயத்து தலைவர் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரி ஆகியோர் பலியாகினர். நான்கு பேர் காயம் அடைந்தனர். மேலும், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை அருகே, மார்க்கெட் பகுதி யில் குண்டு வெடித்தது. இதில், மூவர் காயம் அடைந்தனர். புல்வாமா மாவட்டத்தில், நேற்று நடைபெற்ற, என்கவுன்டரில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் இருவர், பாதுகாப்பு படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சீராகும் ரயில் சேவை!: ஜம்மு - காஷ்மீரில், கடந்த, 12ம் தேதியில் இருந்து, காலை, 10:00 முதல், மாலை, 3:00 மணி வரை, பல்வேறு வழித்தடங்களில், ஒரு சில ரயில்கள் இயங்க தொடங்கின. நிலைமை சீராகி வருவதை அடுத்து, தற்போது, 16 ரயில்கள் இயங்க துவங்கி உள்ளன. காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை, ரயில் சேவை வழங்கப்படுகின்றன.