திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்குவதை முன்னிட்டு நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்ஸவ விழா நடக்கிறது.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கிய விழாவான தீப திருவிழா டிச., 1-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப திருவிழா இனிதே நடக்க வேண்டி இன்று நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்ஸவவிழா நடக்கிறது. விழாவில் இரவு 8:30 மணிக்கு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நாளை கோவில் பரிவார தேவதையான பிடாரியம்மனுக்கு உற்ஸவமும் நவ.,30-ல் விநாயகர் உற்ஸவத்தில் விக்னஷே்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜை நடக்கும். டிச., 1 அதிகாலை 5:30 மணி முதல் 7:05 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.இதை முன்னிட்டு காலையில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் , பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தங்கக்கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து வெள்ளி விமானங்களில் வீதி உலா வருவர். அன்றிரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.டிச., 6ல் வெள்ளிரத ஓட்டம் 7ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. டிச., 10ல் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும் மாலை 6:00 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதைக்காண பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவை தருவர். தீப திருவிழா தொடங்கி உள்ளதால் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.