திருப்புத்துார்: திருப்புத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோயில் யோகபைரவர் சன்னதியில் சம்பகசஷ்டி விழா துவங்கியது.
தேவர்களை அச்சுறுத்திய சிவபக்தர்களான காசுரன், சம்பகாசூரனையும் பைரவர் குமார சஷ்டியன்று வதம் செய்தார். அவர்களை தன் பூதகணத்துடன் சேர்த்துக்கொள்கிறார். அந்த தோஷம் நீங்கவே யோகபைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்தது பூஜை செய்கிறார். இவற்றை சம்பகசஷ்டி விழாவாக நடத்துகிறோம். கார்த்திகை பிரதமை திதியன்று காப்பு கட்டி விழா துவங்கியது. யோகபைரவர் சன்னதி முன் யாகசாலையில் அஷ்ட பைரவயாகம் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பைரவர் வெள்ளிக் கவசம் அணிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து டிச.,2 வரை சம்பக சஷ்டி விழா நடைபெறும். தினமும் அஷ்ட பைரவர் யாகம் நடக்கும். விழா குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.