பதிவு செய்த நாள்
28
நவ
2019
02:11
ஓமலூர்: தீபத்திருவிழாவை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டியில், 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்களிடம், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்க, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து, ஏராளமானோர், ஆர்டர் கொடுப்பர். கடந்தாண்டு, அகல்விளக்கு ஒரு மூட்டை(1,000 விளக்கு) 450 முதல், 500 ரூபாய் வரை விற்றது. நடப்பாண்டு கார்த்திகை தீபத்திருவிழா, வரும் டிச., 10ல் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக, சில நாளாக, அகல் விளக்கு தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது, ஒரு மூட்டை, 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து, மண்பானை தொழிலாளர் சுப்ரமணி கூறுகையில், கடந்தாண்டை விட, நடப்பாண்டு ஆர்டர் அதிகளவில் பெறப்பட்டுள்ளது. இடையிடையே மழையால் தாமதமாகிறது. இருப்பினும், குறைந்த நாட்களே உள்ளதால், தீவிரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம், என்றார்.