சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு கம்பத்தில் பெர்மிட் வழங்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2019 01:11
கம்பம் : சபரிமலை சீசன் காரணமாக தற்போது வாகன போக்குவரத்து அதிகரிக்கதுவங்கியுள்ளது. கேரளா செல்ல வாகனங்கள் பெர்மிட் வாங்க வேண்டும். இதற்கென லோயர்கேம்பில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதன் அலுவலகத்தை, தேனிக்கு மாற்றி விட்டனர். இதனால் சபரிமலை செல்லும் வாகனங்கள் சிக்கலில் சிக்கி வருகின்றன. பெரும்பாலான வாகனங்கள் கம்பமெட்டு ரோட்டில் செல்கின்றன.
அந்தவாகனங்களும் பெர்மிட் வாங்க தேனிக்கு வரவேண்டியது உள்ளது. இரண்டு மாதங்களுக்காவது தற்காலிக பெர்மிட் வழங்கும் சோதனை சாவடியை கம்பம் நகருக்குள் நுழையும் இடத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.டிரைவர்கள் கூறுகையில், கம்பம், கூடலுார், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம்,சின்னமனுார் உள்ளிட்ட பகுதியில் உள்ள டூரிஸ்ட் கார்கள், வேன்கள், பெர்மிட் வாங்க தேனி செல்ல வேண்டியுள்ளது. மேலும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் லோயர்கேம்ப் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி பெர் மிட் வாங்க தேனி செல்ல வேண்டியுள்ளது. எனவே கம்பத்திற்குள் நுழையும் இடத்தில் தற்காலிக பெர்மிட் வழங்கும் சோதனை சாவடியை அமைக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றனர்.