பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
திருநெல்வேலி: கர்நாடக மாநிலம் சிருங்கேரி சங்கர மடத்தின், 36வது பீடாதிபதி ஜெகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள், தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். அவர் கேரளாவில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலில் விழாக்களில் பங்கேற்றார். 17 ஆண்டுகளுக்கு பிறகு, நெல்லை சந்திப்பு சிருங்கேரி சாரதா மண்டபத்துக்கு, பாரதி தீர்த்த சுவாமிகள் வருகை தந்துள்ளார். அவருக்கு, மங்கள வாத்தியம் முழங்க, பூர்ண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. அவர் பேசுகையில், ""நெல்லை மாநகரில் சங்கர ஜெயந்தி விழா, 3வது முறை நடக்கிறது. அதாவது கடந்த, 1957, 1987ல் நடந்த நிகழ்ச்சியில், சிருங்கேரி சங்கர மடத்தின் சுவாமிகள் வந்து இருக்கிறார்கள். தற்போது நடைபெறும், சங்கர ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. நெல்லை பக்தர்கள் செய்த புண்ணியம் தான் இங்கு, 3 முறை சங்கர ஜெயந்தி விழா நடந்து இருக்கிறது. ராமர் பிறந்தநாளை ராமநவமியாக கொண்டாடுவது போல், கிருஷ்ணர் பிறந்தநாளை கோகுலாஷ்டமி என கொண்டுவது போல், ஆதி சங்கரர் பிறந்தநாளை சங்கர ஜெயந்தி விழாவாக கொண்டாட வேண்டும். இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும். மனிதர்களுக்கு நன்றி மறவாத குணம் அவசியம். ஒவ்வொரு மனிதனும் தனக்கு உதவி செய்தவர்களை மறக்கக் கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த குணங்கள் மனிதனை மேலும் வளர்க்கும், என்றார். நேற்று மாலையில், தியாகராஜ நகர் சாரதா மண்டபத்தில் உள்ள கோவிலுக்கு விஜயம் செய்தார். அங்கும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. கோவிலில், வரும் 29ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதுவரை சுவாமிகள் அங்கேயே தங்கி, சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார். இன்று (21ம் தேதி) மாலையில், நெல்லையப்பர் கோவிலில் தங்கத் தேரோட்டத்தை நடத்துகிறார்.