சபரிமலை: பம்பையில் அப்பம், அரவணை கவுன்டர் திறக்கவும், சன்னிதானத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் முக்கிய பிரசாதங்கள் அப்பம், அரவணை. ஒரு பாக்கெட் அப்பம் 40 ரூபாய். அரவணை ஒரு டின் 80 ரூபாய். இதன் விற்பனை மையங்கள் சன்னிதானம், மாளிகைப்புறம் நடைப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ளன. பக்தர்கள் பிரசாதத்தை வாங்கி சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூட்டமும் அதிகமாக உள்ளது.எனவே பம்பையில் அப்பம், அரவணை விற்பனை கவுன்டர் திறக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. டிச.,10ம் தேதி முதல் இந்த கவுன்டர் செயல்படும்.அலைபேசிக்கு தடைசபரிமலையில் மூலஸ்தானத்தின் நான்கு பக்கமும் அலைபேசி பயன்படுத்தி படம் எடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.சிலர் போன் கேமரா மூலம் மூலஸ்தானத்தை படம் எடுத்து அது சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து இங்கு அலைபேசி பயன்படுத்த தடை விதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 18-ம் படியேறுவதற்கு முன் பக்தர்கள் அலைபேசியை ஆப் செய்து பைகளுக்குள் வைத்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.