தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜரின் 173வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 11ம் தேதி, தொடங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். விழாவில் சபை அறங்காவலர்கள் குழுத்தலைவர் வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 15ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறுது. விழாவில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதற்காக இன்று காலை 9 மணிக்கு திருவையாறில், ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில், சபை அறங்காவலர்கள் குழுத்தலைவரும்,த.மா.கா., கட்சியின் தலைவருமான வாசன், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு வைத்தனர்.