பதிவு செய்த நாள்
07
டிச
2019
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, வெள்ளி யானை வாகனத்தில், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த ஆறாம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதில், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் சிலைகள் மாடவீதியில் வலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து யானை வாகனத்தில், விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.