பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
சபரிமலை : சபரிமலையில் இன்று, கண்ணைக் கவரும் கார்த்திகை தீப விழா நடக்கிறது.
சபரிமலை சன்னிதானத்தில் இன்று, கார்த்திகை தீப விழா நடக்கிறது. 18ம் படிக்கு இருபுறமும் அடுக்கு விளக்கிலும், சன்னிதான சுற்றுப்புறம் முழுவதும் தீபம் ஏற்றப்படும். 18-ம் படிக்கு கீழே ஓம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், தீபம் ஏற்றப்படும். சன்னிதானம் முழுவதும் தீபம் ஒளிர்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
சனிக்கிழமை முதல் நேற்று இரவிலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பெரிய நடைப்பந்தலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று மாலை, சன்னிதானத்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், பம்பையில் பக்தர்கள் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனே பம்பை திரும்புமாறு அறிவிக்கப்பட்டது.பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஆயுர்வேத மருத்துவமனை செயல்படுகிறது. மருத்துவ அதிகாரி தலைமையில், இங்கு, 15 பேர் பணியாற்றுகின்றனர். உடல் வலி, முதுகு தண்டுவலி போன்றவற்றுக்கு மசாஜ் செய்து மாத்திரை, மருந்து வழங்குகின்றனர். இந்த சீசனில், 1200 பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சுதர்ஷன் திட்டம்: முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தரிசனத்திற்கு சிரமப்படுவதை தடுக்க சிறப்பு வசதி செய்யப்பட வேண்டும் என, சட்டசபை குழு அரசுக்கு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, பம்பை-, நீலிமலை-, அப்பாச்சிமேடு பாதையிலும், சுவாமி அய்யப்பன் ரோட்டிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மலை ஏற முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு டோலி வசதி செய்தல், தங்க வசதி செய்து கொடுத்து, சிறப்பு தரிசனத்திற்கும் வழி செய்வர். போலீஸ் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக பத்தணந்திட்டை கலெக்டர் நுாகு தெரிவித்தார்.