பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுவாமி விக்ரகங்களுக்கு மா காப்பு செய்யப்பட்டது.
கடந்த, 1997ல், தஞ்சாவூர் பெரிய கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 23 ஆண்டுகள் கழித்து, வரும், பிப்., 5ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதற்காக, 2ம் தேதி, பாலாலயம் நடத்தப்பட்டு, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முன் திரையிடப்பட்டது. மேலும், கும்பாபிஷேகத்துக்கு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடத்த வசதியாக, கோவில் அருகே யாகசாலை பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
கோவிலின் சன்னதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசானமூர்த்தி, சிவலிங்கங்கள் - 252, விநாயகர் சிலைகள் - 12, முருகன் சிலைகள் - எட்டு மற்றும் சப்தக்கன்னிகள் அடங்கிய, சிலா மூர்த்திகள் என, 338 விக்ரகங்களுக்கு நேற்று, மா காப்பு துவங்கியது.மொத்தம், 450 லி., தயிர், 200 கி., பச்சரிசி மாவு ஆகியவற்றால், மா காப்பு தயாரிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, மா காப்பு அகற்றப்பட்டு, எண்ணெய் காப்பு சாத்தப்படும். 50க்கும் மேற்பட்ட சிவ தொண்டர்கள், இந்த உழவார பணிகளில் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் டி.ஐ.ஜி., லோகநாதன், எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர், நேற்று, கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதற்கட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்தும்மிடத்தை தேர்வு செய்து வருகிறோம். பக்தர்கள், கோவிலுக்குள்ளும், வெளியே நின்றும், கோபுரத்தை தரிசிப்பர். அதனால், தரிசன இடங்களையும் தேர்வு செய்து வருகிறது. எவ்வளவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பது குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும்.லோகநாதன், டி.ஐ.ஜி., தஞ்சாவூர்