திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது இன்று (டிச., 10 ) மாலை 6:15 மணிக்கு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
காலை தேரோட்டம் நடக்கிறது. இங்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகையையொட்டி பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல், சுவாமி பிரதிநிதி நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கப்பட்டது. தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்து சுவாமி கிரீடத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு, கரங்களில் செங்கோல், சேவல், மயில்கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவையொட்டி இன்று காலை 10:15 மணிக்கு தேரோட்டம், மாலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். நாளை வரை பொது மக்கள் மலைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.