தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிநாத சுவாமி கோவில். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை விழா தொடங்கியது. பின்னர் சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளினார். விழாவின் முக்கியநாளான இன்று காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பின்னர் திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற்றது. நாளை (டிச.11ம்தேதி) காலை படிச்சட்டத்தில் வீதியுலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.