பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலின் மதில்சுவர், நுழைவாயில் சீரமைக்க, மாநகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி, நான்காண்டாக, நீதிமன்ற வழக்குக்கு இடையே, நீண்ட இழுபறியுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசுக்கு அளித்த மனுவில், ’சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழா உள்ளிட்ட அவசர காலங்களில், பக்தர்கள் சென்றுவர போதிய நுழைவாயில் இல்லை. மதில்சுவரும் சேதமடைந் துள்ளது. அடிப்படை வசதி செய்து கொடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுகுறித்து, ஆய்வு செய்து அறிக்கையளிக்க, மாநகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் முதன்மை செயலர் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், நேற்று (டிசம்., 12ல்) காலை, மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், கோவில் நிர்வாக அதிகாரி ராஜாராம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, நுழைவாயிலை அகலப்படுத்தல், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவிலுக்கு வரும் சாலையை விரிவுபடுத்தல்; ஆடிப்பண்டிகையின் போது அவசர கால வழி ஏற்படுத்தல்; மதில்சுவரை மறு சீரமைத்தல் குறித்து ஆலோசிக்கப் பட்டது.