சபரிமலை: ‘இருமுடி கட்டில் பன்னீர் கொண்டு வர வேண்டாம்’ என பக்தர்களுக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலை பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதற்கு இருமுடியில் கொண்டு வரப்படும் பொருட்களும் காரணம்.
பக்தர்களுக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு விடுத்துள்ள வேண்டுகோள்: இருமுடி கட்டில் கொண்டு வரும் பன்னீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் விட்டு சபரிமலை காடு களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பன்னீரில் ரசாயணம் கலந்துள்ள தால் அதை பூஜைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கொண்டு வரும் பன்னீரை பக்தர்கள் மீது தெளித்து பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்கின்றனர்.
இதை அழிப்பது பெரிய சவாலாக உள்ளது. இருமுடி கட்டில் நெய்தேங்காய், காய்ந்த அரிசி, காணிக்கை, மஞ்சள் ஆகியவை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. மஞ்சள் பொடி பாலிதீன் கவரில் கிடைத்தால் அதை பேப்பர் அல்லது இலையில் பார்சல் செய்து கொண்டு வரவேண்டும். அவல், பொரி போன்ற பொருட்கள் தேவை இல்லை.
சுவாமிக்கு எது தேவையோ அது மட்டும் கொண்டு வந்து, சபரிமலை காடுகளையும், சுற்றுச் சுழலையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். சபரிமலை பூஜைகள் அனைத் திலும் தந்திரி தான் இறுதி முடிவு எடுப்பார்.