பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
12:04
தஞ்சை: தஞ்சை நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று (24ம் தேதி) அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக, தஞ்சை மேலராஜவீதியிலுள்ள நவநீத கிருஷ்ணன் கோவில் விளங்குகிறது. அட்சய திரிதியை தினத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணனுக்கு பக்தர்கள், அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அளவு அவலை புதுத்துணியில் முடிந்து, மூன்று முறை வலம் வந்து, இறைவனின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து, வழிபட்டால், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இங்கு பக்தர்கள் திரளாக பங்கேற்பது வழக்கமாகும்.இதன்படி நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று (24ம் தேதி) காலை ஒன்பது மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை ஆறு மணிக்கு பக்தர்களுக்கு நவநீதகிருஷ்ணன் கோவிலை மூன்று முறை வலம் வந்து, அவல் முடிச்சி சமர்ப்பித்து வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி புறப்பாடு தீபாராதனை நடத்தப்படும். ஏற்பாட்டை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கோவில் மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் அட்சய திரிதியை வழிபாட்டுக்குழுவினர் செய்து வருகின்றனர்.