பதிவு செய்த நாள்
24
ஏப்
2012
12:04
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று சித்திரை கிருத்திகை விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விமரிசையாக கொண்டாடப்படும் கிருத்திகைகளில், சித்திரை கிருத்திகை பிரதானமானது.
வண்ணக் காவடிகள்: நேற்று சித்திரை கிருத்திகையையொட்டி, சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிராக்டர், வேன், மாட்டு வண்டி போன்ற வாகனங்களில் குவிந்தனர். நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து, சரவணப் பொய்கையில் நீராடினர். காவடி மண்டபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர், உடலில் அலகு குத்தி, பலவித வண்ணக்காவடிகள் எடுத்து ஊர்வலம் வந்தனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். பல்வேறு திருச்சபைகளின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், தீப தூப ஆராதனை நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில், கந்தபெருமான் வீதியுலா நடந்தது. பக்தர்களின் தாகம் தீர்க்க, பேரூராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. போலீசார் வாகனங்களை முறைப்படுத்தாததால், திருப்போரூரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.