பதிவு செய்த நாள்
26
டிச
2019
03:12
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது.
திண்டுக்கல் துாய வளனார் பேராலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கத்தோலிக்க பிஷப் தாமஸ் பால்சாமி, பங்கு தந்தை சகாயராஜ் பங்கேற்றனர். மேட்டுப்பட்டி வியாகுலமாதா ஆலயம், குமரன் திருநகர் ஆரோக்கியமாதா ஆலயம், என்.ஜி.ஓ., காலனி ஆரோக்கிய அன்னை பேராலயம், மாரம்பாடி அந்தோணியார் ஆலயம், மங்கமனுாத்து சந்தியாகப்பர் ஆலயம், மரியநாதபுரம் உட்பட பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* கொடைக்கானல்: கொடைக்கானல் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் இரவு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொளியில் ஜொலித்தன. ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கேக், இனிப்பு கொடுத்தனர். தாண்டிக்குடி மற்றும் மலைப்பகுதியலும் விழா நடந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. எசு கிறிஸ்துவின் பிறப்பு கூட்டுத் திருப்பலியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு செய்தி கூறப்பட்டு, திருப்பலி நிறைவேற்றி ஆசீர் வழங்கப்பட்டது. ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்கள், பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
புனித உத்திரிய மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த குடில்களில் பிரார்த்தனை செய்து கேக் வெட்டி விழா கொண்டாடினர். தவசிமடை, புகையிலைப்பட்டி, வங்கவமனுாத்து, செந்துறை பகுதிகளிலும் விழா நடந்தது.
* ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சர்ச்களில் இரவு முழுவதும் திருப்பலிகள், கூட்டுபிரார்த்தனைகள் நடந்தன. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
* சின்னாளப்பட்டி ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், கன்னிவாடி, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி பகுதிகளில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சர்ச்களில் சிறப்பு திருப்பலிகள், கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. ஆராதனைகளுக்குப்பின், ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வீடுகளையும் வண்ண்விளக்குகள், மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.