பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
நம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
குருபகவான் சாதகமாக அமைந்திருக்கும் சூழலில் புத்தாண்டு மலர்கிறது. குருபலத்தால் குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குருவால் எந்த பிரச்னையும் முறியடித்து வெற்றி காணலாம். சனியின் பார்வை பலத்தால் பொருளாதார வளம் கூடும். ஆற்றல் மேம்படும்.
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு, மனை வாங்க யோகமுண்டு. சிலர் வசதியான வீட்டிற்கு குடியேறுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். எந்த ஒரு விஷயத்தையும் தீர சிந்தித்த பிறகே ஈடுபடுவது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம்.
பெண்களுக்கு பொன், பொருள் சேரும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களிடம் பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திர தொடர்பான தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.
* வியாபாரிகளுக்கு கூட்டாளி இடையே ஒற்றுமை மேம்படும். எதிரியால் ஏற்பட்ட முட்டுக்கட்டை விலகும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் குருவால் முன்னேற்றம் அடைவர்.
* ஐ.டி., துறையினருக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் கூட இணக்கமுடன் பழகுவர்.
* வக்கீல்களுக்கு ஆண்டின் இறுதியில் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
* ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். எதிரியும் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
* பொதுநல சேவகர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவர். புதிய பதவியும் தேடி வரும்.
* கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பாராட்டு, விருது கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு நெல், சோளம், மஞ்சள், கேழ்வரகு பயிர்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். கால்நடைச் செல்வம் பெருகும்.
* மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு அவப்பெயரையும் சந்திக்கலாம்.
* வியாபாரிகளுக்கு ஆண்டின் முற்பகுதியில் பணம், பொருள் களவு போக நேரலாம். பொருளாதார இழப்பும் ஏற்படும். அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வேலைப்பளு அதிகரிக்கும்.
* மருத்துவர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம். திடீர் இடமாற்றம் ஏற்படும்.
* வக்கீல்களுக்கு ஆக.31க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. வேலையில் அக்கறையுடன் ஈடுபடவும்.
* அரசியல்வாதிகள் மக்கள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. தொண்டர்களின் வகையில் செலவு அதிகரிக்கும்.
* கலைஞர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை சுமாரான நிலையில் இருப்பர். ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி தேவைப்படும்.
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை விடாமுயற்சியுடன் படிக்கவும்.
பரிகாரம்:
● வெள்ளிக் கிழமையில் லட்சுமிக்கு நெய் தீபம்
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை
● கார்த்திகையன்று முருகனுக்கு பாலபிஷேகம்