காலடி: ஆதிசங்கரர் பிறந்த கேரளா எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது. கடந்த ஏப்., 22ல், யாகம் துவங்கியது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில், 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்துகின்றனர். லட்சுமி யந்திரமும், தங்க நெல்லிக்கனிகளும் வைத்து, கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்படும். நேற்று அட்சய திரிதியை முன்னிட்டு காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏப்., 26ல் ஆதிசங்கர ஜெயந்தியுடன் விழா நிறைவடைகிறது. தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது.