பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
விருத்தாசலம்: போதிய பராமரிப்பு இன்றி ஆலம், அரசங்கன்றுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்வதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு விபச்சித்தி முனிவர் என்பவர் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, திருப்பணியை துவங்கியது தான் விருத்தகிரீஸ்வரர் கோவில். போதிய பராமரிப்பு இன்றி அரசங்கன்றுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்வதால் கோவில் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பழமையான கோவில் சித்தர் காலத்திற்கு பிறகு கண்டராதித்தசோழன் மனைவி செம்பியன்மாதேவி, ராஜராஜசோழன் மனைவி ஏழிசைமோகனான, குலோத்துங்க சோழன், காடவராதித்தன், வையப்பகிருஷ்ணநாயக்கர், கச்சிராயர், வீரசேகர செவ்வப்ப நாயக்கர், முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் திருப்பணிகளை செய்துள்ளனர் என்பது இக்கோவிலின் பழமைக்கு சான்று. மணிமுக்தாறு நதியில் குளித்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து விருத்தகிரீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.
பாழடைந்துள்ள கிணறு இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வதற்கு தோண்டப்பட்ட கிணற்றின் சுற்றுச் சுவர் கருங்கல் மற்றும் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பராமரிப்பின்றி கிணற்றில் செடி, கொடிகள் முளைத்து தண்ணீரின்றி பாழடைந்து கிடக்கிறது. அதே போன்று கோவில் குளமும் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி அசுத்தமாக உள்ளதால் குளத்தில் உள்ள தண்ணீர் பச்சை நிறமாக உள்ளது.
பலவீனமான கோபுரம் தமிழக அரசின் இந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அச்சமயத்தில் கோவில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது அரசு மானியம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்கள் பங்களிப்பு 3 லட்சத்து 35 ஆயிரம் என 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பலவீனமான நடுகோபுரத்தை பலப்படுத்த, அதனையொட்டி உள் பக்கம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. விரிசல் ஏற்படும் அபாயம் ஆனால் போதுமான பராமரிப்பின்றி தற்போது கோபுரத்தில் ஏராளமான ஆலம், அரசங் கன்றுகள், செடி, கொடிகள் படர்ந்து வருவதால் கலைநயமிக்க அழகிய சிலைகள் நாளுக்கு நாள் பொலிவிழந்து வருகின்றன. ஆலம், அரசங்கன்றுகளின் வேர்கள் கோபுர சுவர்களுக்குள் ஊடுருவுவதால் கோபுரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பக்தர்கள் அவதி பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிவறை, குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நீர் தேக்கத் தொட்டி ஒன்றை கட்டி கொடுத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது. இதனையும் பராமரிக்காமல் விட்டதால் பயனின்றி பாழடைந்து கிடக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அவதியடைகின்றனர். சித்தர்கள், சோழர்கள், நாயக்கர்களால் திருப்பணி செய்யப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை முக்கியத்துவம் கொடுத்து பக்தர்களின் வசதிக்காக கிணற்றை சீரமைப்பதுடன், குடிநீர், கழிவறை வசதிகளை செய்து கொடுத்து, கோபுரத்தில் வளர்ந்து வரும் ஆலம், அரசங்கன்றுகள் மற்றும் செடிகொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.