தஞ்சையில் இன்று சிவகங்கை பூங்கா அனுமார் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2012 11:04
தஞ்சாவூர்: தஞ்சையில், சிவகங்கை பூங்காவில் அமைந்துள்ள அனுமார் கோவில் கும்பாபிஷேக விழா இன்று 25ம் தேதி வெகுவிமர்சையாக நடக்கிறது. தஞ்சை சிவகங்கை பூங்கா அனுமார் கோவில் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் 75 ஆண்டுக்கு பின் திருப்பணி நடத்தி முடிக்கப்பட்டு, இன்று 25ம் தேதி காலை ஒன்பது மணிக்கு மேல் 10 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் அனுமனை வணங்குவதால் பக்தர்களின் கவலைகள் நீங்கும் என்னும் ஐதீகம் நிலவி வருகிறது. மேலும் அனுமன் இங்கு கிழக்கு திசை நோக்கி திருமுக மண்டலம் தந்தருள்கிறார்.இத்திருமுகத்தை தரிசித்தால் தீராத தோஷம் தீரும். ஆஞ்சநேயரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஒன்பது நெய்விளக்கேற்றி ஒன்பது முறை வலம் வந்து வணங்கினால் நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்னும் நம்பிக்கையும் பக்தர்கள் இடையே நிலவுகிறது.இத்தகைய பெருமைமிக்க அனுமார் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி முன்னதாக, கடந்த 23ம் தேதி காலை ஒன்பது மணி முதல் புண்யாகவசனம், அனுக்கை, கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கியது. மாலையில் ஆறு மணி முதல் ப்ரதிஷ்ட ஹோமத்துடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.நேற்று (24ம் தேதி) காலை எட்டு மணி முதல் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை நான்காம் கால யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் இளங்கோ, உதவி கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ், அர்ச்சகர் ராகவேந்திரன், எழுத்தர் பாலாஜி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.