பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று(25ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (25ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு மேல் சந்திரசேகரசுவாமி, கோயில் யானை கோமதியுடன் திருவிழாவிற்கான பிடிமண் எடுப்பதற்காக அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு மதியம் 1 மணியளவில் சந்திரசேகரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யானை "பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோமதி யானை மண்வெட்டியால் பூமியில் வெட்டி திருவிழாவிற்கான "பிடிமண் எடுத்தது. மாலையில் "பிடிமண்ணுடன் கோயிலுக்கு திரும்பிய சந்திரசேகர சுவாமிக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக பெண்கள் வீட்டு வாயிலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, உள்துறை கண்காணிப்பாளர் முருகானந்தம், பணியாளர் சங்கம் மழவராயன், பணியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் தாமோதரன், ஏ.எஸ்.பி.,மகேஸ் ஆகியோர் சட்டம், ஒழுங்கை கண்காணித்தனர்.
இன்று(25ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. 4ம் திருநாளான 28ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 63 நாயன்மார்களுக்கு, சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் திருநாளான 29ம் தேதி இரவு 8 மணிக்கு தங்க சப்பரத்தில் அம்பாளும், வெள்ளி சப்பரத்தில் சவாமியும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் திருநாளான மே 1ம் தேதி இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி பிரம்மாம்ச தரிசனமும், இரவு 12 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி ருத்ராம்ச தரிசனமும், 2ம் தேதி காலை 6 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி விஷ்ணுவாம்ச தரிசனமும் நடக்கிறது. 9ம் திருநாளான காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ராஜாமணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.