வருடத்துக்கு ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இந்த பரமபதம் விளையாட்டை விளையாடுவார்கள். ஏன் இப்படி ஒரு விதிமுறை இந்த விளையாட்டுக்கு? இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே விளையாடப்படுவது அல்ல. பகவானின் திருவிளையாடல்களைத் தெரிந்து கொள்ளவும், நமது பாவத்தினைப் போக்கிக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொண்டு, பரமபதமாகிய மோட்சத்தினை அடைவதற்கு உரிய பக்திப்பாதையினைக் காட்டும் விளையாட்டு என்பதால்தான் இதனை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் விளையாடுகிறார்கள். தாயத்தை உருட்டி விளையாடத்தொடங்கும் இந்த விளையாட்டில், சில சமயம் ஏணியில் ஏறுவதும், சிலசமயம் பாம்பில் அகப்பட்டு கீழே இறங்குவதும் நடக்கும். இதுவும் கூட நமது பாவ புண்ணியத்தை அறிந்து கொள்வதற்காகத்தான்.
ஒரு சமயம் நாரதர், நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தன. அதனை பகவானிடம் அவர் சொல்லி வருத்தப்பட, நாரதா, முதலில் நரகம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டார், பகவான். நாரதர் விழிக்க, பகவானே சொர்க்கத்தையும் நரகத்தையும் விளக்குவதுபோல், படம்போல் வரைந்து விட்டு, நாரதரை அந்த இடத்தில் நின்று சுற்றிவரப் பார்க்கச் சொன்னார். அப்படிப் பார்த்த நாரதருக்கு நரகத்தின் காட்சிகள் அனைத்தும் தெரிந்ததது. பிறகு அவரை அங்கிருந்து நகரச் சொன்ன பகவான், இப்போது நீர் நரகத்திற்குச் சென்று வரவேண்டிய விதி நிறைவேறிவிட்டது என்றார். பரமபதத்தில் பகவான் வரைந்து காட்டிய படம்தான், பரமபதம் என்றும் சொல்வார்கள். பாம்பின் வாயில் விழுந்தால் பதறாதீர்கள். உங்களுடைய பூர்வ ஜன்ம பாவம் பகவான் அருளால் விலகுகிறது என்று உணருங்கள். ஏணியில் ஏறிடும்போது உங்கள் புண்ணியக்கணக்கு தொடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருங்கள். எந்த சமயத்திலும் கர்வமோ, கலக்கமோ இல்லாமல் விளையாடுங்கள். பகவான் திருவிளையாடல்படியே எல்லாம் நடக்கிறது என்று நம்புங்கள். பகவான் உங்கள் பக்கத்தில் இருப்பார். பாவங்களைப் போக்கி புண்ணியத்தைப் பெருகச் செய்வார். பகவான் அருள்பாலிக்கும் வைகுந்தத்திற்கு உரிய பெயராலேயே அழைக்கப்படும் பரமபத விளையாட்டு நமது பாரம்பரியத்தில் உள்ள புராணப் பழமையானது.