திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேகளீச பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விசுவரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பிடாகி உடையவர் சன்னதியை வந்தடைந்தார்.
அங்கு மண்டகப்படி, பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க 5:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. சுவாமி பரமபத மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், இராப்பத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., பொறுப்பு ராமநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மேற்பார்வையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.