சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2020 10:01
சபரிமலை : சபரிமலையில் மிக அபூர்வ சம்பவமாக ஜன.14ம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை. மறு நாள் அதிகாலை மகர சங்கரமபூஜைக்கு பின்னர் அதிகாலை 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜன.15 அதிகாலை 2:09 மணிக்கு கடக்கிறது. இதனால் ஜன.14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஜன.15 அதிகாலை 1:45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2:09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின்னர் 2:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
ஜன.15 அதிகாலை 3:00 மணிக்கு பதிலாக 4:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு பின்னர் திருவாபரணங்கள் வந்து தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் படியேற முடியும். ஒரு நாள் திறக்கப்பட்ட நடை அன்று அடைக்கப்படாமல் அடுத்த நாள் அதிகாலை வரை திறந்திருப்பது சபரிமலையில் மிக அபூர்வமானது என பக்தர்கள் தெரிவித்தனர்.