திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக நம்பெருமான் மோகன அலங்காரத்தில் எழுந்தருளினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தை தொடர்ந்து ராப்பத்து துவக்கமாக, நேற்று மாலை 5:00 மணிக்கு தேகளீச பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு பெருமாள் பாண்டிய மண்டபத்தில் உபய நாச்சியார்களுடன் ஆழ்வார்கள் புடை சூழ எழுந்தருளி, திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(6ம் தேதி) காலை சொர்க்கவாசல் திறப்பு விழாவும், தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கமும், ராப்பத்து உற்சவம் ஆரம்பம் ஆகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.