பதிவு செய்த நாள்
06
ஜன
2020
11:01
கோத்தகிரி: கோத்தரின ஆதிவாசி மக்கள், தங்களது குல தெய்வ திருவிழாவை, பாரம்பரிய நடனம் ஆடி, பாட்டு பாடி கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில், புதுகோத்தகிரி, கீழ் கோத்தகிரி உட்பட, பல்வேறு பகுதிகளில் கோத்தரின ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வமான, அய்யனோர் அம்மனோர் திருவிழா, டிசம்பர் அல்லது ஜனவரியில் நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான ஒரு வார விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. புதுகோத்தகிரி கிராமத்தில் இருந்து, கலாசார உடை அணிந்த, கோத்தரின ஆதிவாசி மக்கள், பாரம்பரிய இசை முழங்க, நேரு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு, ஊர்வலமாக வந்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, நடை திறக்கப்படும் இக்கோவிலில், சிறப்பு பூஜை நடத்தினர். சுவாமி தரிசனம் செய்த மக்கள், கோவில் வளாகத்தில், பாரம்பரிய இசைக்கு ஏற்ப, நடனமாடி மகிழ்ந்தனர். சிறப்பு பூஜையை நிறைவு செய்த பக்தர்கள், புதுகோத்தகிரி கிராமத்திற்கு, ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோவில் வளாகத்தில், தீ மூட்டி, பெண்கள் உட்பட அனைவரும் நடனமாடினர். தொடர்ந்து, கோத்தரின மக்களின் முக்கிய தொழிலான மண்பாண்டம் மற்றும் விவசாய கருவிகளை தயாரித்து, சிறப்பு பூஜைகளை நடத்தினர்.