பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
மோகனூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் குண்டம் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மோகனூர் கடைவீதியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த 9ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து, அதிகாலை காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர்.தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. கடந்த 22ம் தேதி இரவு 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பூக்குழி பூஜை நடந்தது. மதியம் 3 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
அன்று இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை கிடாவெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டி குழந்தைகள் தூக்கி வந்தும் ஸ்வாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (ஏப்., 25) கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.