பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
மணப்பாறை: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் 27ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது.மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டு பழைமை வாய்ந்த இக்கோவில் அம்மன், "சமயபுரம் மாரியம்மனின் சகோதரி என கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரைத்திருவிழா வெகுசிறப்பாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நேற்று முன்தினம் மாலை பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது.
முன்னதாக வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஊர் நாட்டாண்மை கலையரசன், பரம்பரை அறங்காவலர் வீரமணி குடும்பத்தினரின் பூத்தட்டுகள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூத்தட்டு ஊர்வலங்கள் கோவிலை வந்தடைந்தன.காந்தி நகர், அண்ணாவி நகர், மதுரை ரோடு, பூதமலைக்கரடு, திருச்சி ரோடு, காளியம்மன் கோவில், அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் முனியப்பன் கோவிலுக்கு வந்து நேற்று அதிகாலை நான்கு மணிக்கு ராஜ வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து. அதன்பின் அம்மனுக்கு பூ அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடந்தது.நகராட்சி சேர்மன் சாந்தா, அறங்காவலர் வீரமணி, கமிஷனர் உமாமகேஸ்வரி, கோவில் நிர்வாக அதிகாரி கவுதமன், முன்னாள் சேர்மன் கண்ணையன், அ.தி.மு.க., நகரச்செயலாளர் பவுன்ராமமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் பொன்னுச்சாமி, ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.