வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பிரசித்தி பெற்ற நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கியது. கடந்த 18ம் தேதி கம்பம் நடுதல், 22ம் தேதி வடிசோறு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.அதை தொடர்ந்து புகளூர் மற்றும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் அபிஷேகம், பால்காவடி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் ஸ்வாமிக்கு நடந்தது. நேற்று மதியம் 12 மணிக்கு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்று "பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஸ்வாமியை வழிப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து பூஜைகள் செய்த பின் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.வேலாயுதம்பாளையம், செம்படாபாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம் சுற்றுப்பகுதியை சேர்ந்த 18 கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.