பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், தீப திருவிழா, ஆனி பிரம்மோற்ஸவம், மார்கழி மாத உத்திராயண புண்ணிய காலம் ஆகியவைகளுக்கு கொடியேற்றம் நடக்கும். அப்போது, சுவாமி சன்னதி முன்புள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூர விழாவிற்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திலும், கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் மார்கழி மாத, உத்திராயண புண்ணியகால பிரம்மோற்ஸவம் நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயர தங்கக்கொடிமரத்தில், தனூர் லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவை தொடர்ந்து, பத்து நாட்கள் காலை, இரவில் சுவாமி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 15ல், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி, 16ல் திருவூடல், 17ல் மறுவூடல் விழா நடக்க உள்ளது.