பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தொதநாடு சீமைக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில் இருந்து, செங்கோல் பக்தர்கள், மடிமனைக்கு அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்து, வீடுகளுக்கு செல்லாமல், அங்கேயே விரதம் இருந்து வருகின்றனர். நாள்தோறும், அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டி, பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, கேர்பெட்டா, பேரகணி மற்றும் காத்துகுளி மடிமனைகளில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, ஒன்னதலை மடிமனையில் விழா சிறப்பாக நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பெத்தளா ஹெத்தையம்மனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி இடம்பெற்றது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலாச்சார உடையுடன் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
முக்கிய விழாவான நாளை (ஞாயிறு) பகல் 12:00 மணிக்கு, மடிமனையில் இருந்து, வண்ண குடைகளின் கீழ், செங்கோல் பக்தர்கள் அம்மனை கிராம கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு கிராம கோவில் சுத்தக்கல்லில், அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இரவு, கத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல, ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, கூக்கல், எப்பநாடு, சின்ன குன்னூர் மற்றும் பெப்பேன் கிராமங்களிலும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.