பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உருமாண்டாம் பாளையத்தில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்க, கோமாதா பூஜை நடந்தது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடக்க வேண்டுமென காங்கேயம் பசு மாட்டுக்கு துடியலூர் அருகே உருமண்டம்பாளையம் அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இங்கு மாட்டை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில், மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என, கோமாதா சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் எலுமிச்சை, வெற்றிலை பாக்கு, தாலி சரடு, மிட்டாய், வளையல், மல்லிகைப்பூ, பச்சை மாவு, மற்றும் சந்தனம், விபூதி ஆகியவற்றை பண்ணாரி அம்மனுக்கு படைத்து, பூஜை செய்தனர். தொடர்ந்து, வாய்க்கட்டு பூஜை நடத்தி, கண்ணாடியில் நிலாவை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், உருமாண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, நஞ்சே கவுண்டன் புதூர், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பவுர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.