போகிப் பண்டிகை: கஷ்டங்கள் யாவும் போக்கி இன்புறுவோம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2020 10:01
இன்று போகிப் பண்டிகை. இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது.
அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். மனக்கவலைகள், கஷ்டங்கள் யாவும் நீங்கும் காலம் வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒரு பிரகாசம், புத்துணர்ச்சி, இன்பம் ஏற்பட்டுவிட்டது என சந்தோஷம் கொண்டாடுதல் முதலானவற்றையே இப்பண்டிகை குறிக்கும். எனவே இச்சுபதினத்தை யாவரும் சந்தோஷத்துடன் கொண்டாடி இட்ட சித்திகளைப் பெற்று இன்புறுவோமாக.