பதிவு செய்த நாள்
15
ஜன
2020
01:01
மதுரை: தமிழகம் முழுவதும் தை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ண தோரணங்களால் வீதியை அலங்கரித்து, புதிய மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து, மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது, அனைவருக்குமான ஆறுதல் வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை. அறுவடை மூலமாக குடும்பம் செழிக்கும் என்பதால், கஷ்டத்தை தீர்க்க உண்மையாக வழி கிடைக்கிறது. ஒளியை கொடுத்து, தானியங்களை விளைவித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில், விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.
தமிழர் திருநாள் என்று போற்றப்படுவதால், தமிழகம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், பொங்கல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என, மூன்று நாட்களும் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளும் கொண்டாடப்படுகிறது. இளைஞர் அமைப்புகள், நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் சார்பில், கிராமம் தோறும், வீதிகள் தோறும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வீதிகளில், எங்கு பார்த்தாலும், வீட்டு வாசலில், பெண்கள் வண்ண கோலமிட்டு, தை மகளை வரவேற்று மகிழ்ந்தனர். அதிகாலை, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக பச்சரிசியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். செங்கரும்புகளை பொங்கல் வைக்கும் இடங்களில், கூடாரமாக நிறுத்தி வைத்திருந்தனர். பொங்கல் தயாரானதும், தலைவாழை இலையில், சர்க்கரை பொங்கலை படைத்து, அவல், பொரி, முறுக்கு போன்ற பதார்த்தங்களை படைத்து, தேங்காய், பழவகைகள் வைத்து வழிபட்டனர். அதன்பின், இனிப்புகளை அனைவருக்கும் கொடுத்து, பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.