திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு சூட்டிய மாலை, ஆண்டாள் பரிணய உற்சவத்தின் போது அணிவிக்க திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நடத்தப்பட்டது. வழிபாட்டு நிறைவில் ஆண்டாள் நாச்சியார் திருமாலுடன் இணையும் கோதா பரிணய உற்சவத்தை தேவஸ்தானம் மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று மாலை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தராஜஸ்வாமி கோவிலில் நடந்தது.
அந்த திருக்கல்யாண உற்சவத்திற்காக, ஏழுமலையான் சூடிய மாலை ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்க திருமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. திருமலை ஜீயர்கள் ஏழுமலையானுக்கு மாலை அணிவித்து, அதை மீண்டும் எடுத்து புதிய மூங்கில் கூடையில் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலுக்கு அனுப்பினர். அன்று மாலை, திருக்கல்யாணத்தின் போது அம்மாலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. பிரம்மோற்சவ கருட சேவையின் போது, சூடி கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொள்ளும் ஏழுமலையான், ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது தான் சூடிய மாலையை ஆண்டாளுக்கு அனுப்பி வைப்பது கைங்கரியத்தில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.