உசிலம்பட்டி: உசிலம்பட்டி எருமார் பட்டி ஜக்கம்மாள் கோயில் வழிபாட்டில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர். இக்கோயிலில் மாட்டுப்பொங்கலன்று ஆண்டுதோறும் விழா நடக்கும். இதற்காக ஆண்கள் மட்டும் வெள்ளை துணி, தேங்காய், பழம், வழிபாடு பொருட்களுடன் வந்து வாகை மரத்தின் அடியில் உள்ள ஜக்கம்மாள் சிலைக்கும், மரத்திற்கும் அலங்காரம் செய்து வழிபடுவர்.
பெத்துசாமி: நாயக்கர்கள் காலத்தில் ஜோதில்நாயக்கனுார் ஜமீனைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாளை பெண் கேட்டனர். ஜமீனை திருமணம் செய்ய மறுத்த ஜக்கம்மாள் மனமுடைந்து எருமார்பட்டி அருகே உள்ள மலையில் இருந்து விழுந்து இறந்து போனார். உடலை இப்பகுதியில் எரியூட்டினர். அவர் இங்கு தெய்வமாக இருப்பதாகவும், ஆண்டுதோறும் தான் இறந்த நாளில் வழிபாடு நடத்தும்படி ஜக்கம்மாள் கூறியதாகவும் ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் இங்கு வந்து வழிபடுகிறோம். முன்பு இங்கு சுடுகாடு இருந்ததால் அப்போதிருந்தே பெண்கள் வருவதில்லை என்றார்.