பதிவு செய்த நாள்
18
ஜன
2020
11:01
புன்செய்புளியம்பட்டி: மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மாதேஸ்வரர் மலை கோவிலில், மண் உருவ சிலைகளை வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது.
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால், அதன் உருவ பொம்மை வாங்கி வைத்து மாதேஸ்வரரை வழிபட்டால், நோய் நீங்குவது ஐதீகமாக இருந்து வருகிறது. பொங்கல் துவங்கியதில் இருந்து, மூன்று நாட்கள் மாடுகள் கருவுற்று பிறந்தால், அந்த கன்றுகளை கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கால்நடைகள் நோயின்றி வாழ, மாட்டுப்பொங்கல் நாளன்று, மாடுகளின் உருவ சிலைகளை, புன்செய்புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமம், மாதேஸ்வரர் மலை கோவிலில் வைத்து வழிபடுவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் பல்வேறு கிராமங்களில், மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாதேஸ்வரர் மலை கோவில் முன் நிறுத்தி, கோபூஜை செய்யப்பட்டது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள், நோயின்றி சுகமாக வாழ நேர்த்திக்கடனாக, இரண்டு அடி உயரமுள்ள மாடு உருவத்திலான மண் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். இதற்காக, மண் சிலைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், நேரடியாக கோவிலுக்கு வந்து, மண்சிலைகளை வைத்து, பூஜை செய்து கண் திறந்து வைத்தனர். ஒரு அடி உயரமுள்ள சிலை, 300 ரூபாய், இரண்டு அடி உயரமுள்ள சிலை, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விழாவையொட்டி மாதேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மூலவர் மாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.