பதிவு செய்த நாள்
18
ஜன
2020
03:01
சிதம்பரம் :சிதம்பரம் நடராஜர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று மதியம் முதலே, நடராஜர் கோவிலுக்கு வரத் துவங்கினர். நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம், கோவில் வெளி பிரகாரத்தில் பெண்கள் பல குழுக்களாக பிரிந்து கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இளம் பெண்கள் கோகோ, கபடி விளையாடினர்.
கிராம பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மதிய உணவை எடுத்து வந்து உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டனர். கோவில் வெளிப்பிரகாரம் மக்கள் கூட்டத்தால் பொழுது போக்கு மைதானமாக காணப்பட்டது. கிள்ளை, புவனகிரி, பரங்கிப்பேட்டை,வல்லம்படுகை, தீர்த்துக்குடி, கருப்பூர், ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், கீழ் குண்டலவாடி, மேல குண்டலவாடி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் கொள்ளிடக்கரையில் கபடி, சிலம்பாட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். கடவாச்சேரி, உசுப்பூர், அம்மாபேட்டை, கூத்தன்கோவில், வேளக்குடி, பழையநல்லூர், வையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் திடல்களில் ஒன்று கூடி கும்மி, கோலாட்டம் உள்ளிட்டவற்றை விளையாடி மகிழ்ந்தனர்.