தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2020 07:01
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்க்கு மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தட்சணா பினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் தைத்திங்கள் முதல் நாளில் இருந்து 5 தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம். சிறப்புவாய்ந்த தென்பெண்ணை நதியில் திருவண்ணாமலை அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதன்படி நேற்று திருவண்ணாமலையில் இருந்து பாதம் தாங்கிகளில் புறப்பட்டு இனறு மதியம் 12:00 மணிக்கு மணலூர்பேட்டை வந்தடைந்தார்.
விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அருணாச்சலேஸ்வரரை எதிர்கொண்டு தென்பெண்ணைக்கு அழைத்துச் சென்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. வசந்த பந்தலில் அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி மண்டகப்படி, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு தென்பெண்ணையில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரும், விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.